25.2.09

தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.....





எமது அன்பிற்கும், மரியாதைக்குமுரிய தமிழ் நெஞ்சங்களே.....

எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி, பட்டவொர்த் டேவான் ஹாஜி அகமட் படாவி மண்டபத்தில் நடைபெறவிருக்கும் "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தைப் பற்றிய விவரங்களை தங்களது வலைப்பதிவுகளில் பதிவிட்டு, இந்நிகழ்வை வெற்றிப் பெற செய்திட வேண்டுகிறோம்.

மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற எதிரணி தலைவர், மூத்த எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசவுள்ளனர். மலேசிய தமிழர் வரலாற்றில், இதுநாள் வரையிலும் இலங்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட பொழுதிலும், இம்முறை நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தின் வழி மலேசிய மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்.


இக்கூட்டமானது, வெறும் நிதி சேகரிப்பு கூட்டமாக மட்டும் முடிந்து விடாமல், இலங்கை அரசாங்கத்தின் இன்வெறி போரை வெளிப்படுத்தும் பிராச்சார கூட்டமாகவும் அமையும். இலங்கையில் நடக்கும் இன அழிப்பு போரை, தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் நடத்தும் இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போலி முகத்திரையையும் கிழிக்கும் கூட்டமாக இது அமையும். தமிழர் அல்லாத மற்ற மலேசியர்களுக்கு இலங்கையில் நடைபெறும் கொலைவெறி ஆட்டத்தை படம்பிடித்துக் காட்டி, மலேசிய மக்களிடத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு கோரப்படும்.


இந்நிகழ்வு சம்பந்தமான விவரங்களை தத்தம் வலிப்பதிவுகளில் வெளியிட்டு, ஈழத்தமிழர் இன்னல் துடைக்க நம்மால் இயன்றதை செய்வோம். நிகழ்வு சம்பந்தமான படங்களை இவ்வலைப்பதிவில் தங்கள் உபயோகத்திற்காக பதிவிடுகிறேன். மேல் விவரங்கள், கீழ்காணும் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்களுக்கு 016 - 438 4767 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்க.

நன்றியுடன்,

மு. சத்தீஸ்,
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி.

16.2.09

ஈழத்தமிழர் உயிர் காக்க, திரண்டு வாரீர்.....


எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் தேதி அன்று, பட்டவொர்த், டேவன் ஹாஜி அஹ்மாட் படாவி (Padang Dewan Haji Ahmad Badawi) மண்டப திடலில், இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக் நிதி சேகரிக்கவும், இலங்கை அரசாங்கத்தின் தமிழின அழிப்பு போரை கண்டிக்கும் வகையிலும் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பினாங்கு மாநில ஜனநாயக செயல் கட்சியினரின் முயற்சியில், அண்மையில் அமைக்கப்பட்ட "ஜசெக - ஈழத்தமிழர் துயர்துடைப்பு நிதி" (DAP - SRI LANKAN TAMILS RELIEF FUND) செயற்குழுவினரின் ஒழுங்கில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினரான, மாண்புமிகு R.S.நேதாஜி இராயர் தலைமையில் அமையப்பெற்ற இக்குழுவானது, ஈழத்தமிழரின் இன்னலை துடைக்க வெறும் நிதியுதவி மட்டும் போதாது என்பதையும், ஈழத்தமிழரின் வாழ்வில் நிரந்தர வசந்தம் வீச தமிழீழம் மட்டுமே நிரந்தர தீர்வென்பதையும் பிராச்சர இயக்கத்தின் மூலம் மலேசியர்கள் மத்தியில் தெளிவுப்படுத்த விரும்புகிறது. இலங்கையில் முன்னர் நடைப்பெற்ற அமைதி பேச்சுகளில் நேரடி பங்காற்றிய, பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர், மாண்புமிகு பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி அவர்களின் வழிகாட்டலோடு இந்த செயற்குழுவின் நடவடிக்கைகள் அமையும்.

பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் நடத்தும் கொலை வெறியாட்டத்தை விட, மிகக்கொடுரமான இன அழிப்புப்போரை நடத்தும் இலங்கை அரசை கண்டிக்காத சர்வதேசத்தின் இரட்டை நாடகத்தைக் கண்டு உலக தமிழர்கள் வெதும்பி போயிருக்கும் இவ்வேளையில், இலங்கை அரசாங்கத்தின் இனவெறி அட்டூழியத்தை தமிழர் அல்லாத மற்ற மலேசியர்களுக்கு விளக்கும் முயற்சியே இந்த மாபெரும் பொதுக்கூட்டமாகும். இந்த பொதுக்கூட்டத்தில், முக்கிய பேச்சாளர்களாக கலந்த்க்கொள்ளவிருப்பவர்கள்,

  1. மாண்புமிகு லிம் குவான் எங், பினாங்கு மாநில முதல்வர்;
  2. மாண்புமிகு பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி, பினாங்கு மாநில துணை முதல்வர்;
  3. மாண்புமிகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மலேசிய நாடாளுமன்ற எதிரணி தலைவர்;
  4. மாண்புமிகு திரு.கர்ப்பால் சிங், மலேசிய நாடாளுமன்ற மூத்த எதிர்கட்சி உறுப்பினர்;
  5. மற்றும் பலர்.


இந்நிகழ்வை பற்றிய மேல் விவரங்கள், மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

நன்றி,

சத்தீஸ் முனியாண்டி,
செயலாளர், ஜசெக - ஈழத்தமிழர் துயர்துடைப்பு நிதி

(மேல் விவரங்களுக்கு, 016-4384767 அல்லது 013-4853128 என்ற எண்களில் எங்களை தொடர்பு கொள்க)