14.8.08

தமிழ் சரித்திரம் படிப்பார்களா,தமிழ் பள்ளி மாணவர்கள்?!

தமிழர் சரித்திரம்,வழி நெடுகிலும் பற்பல சிறந்த வீரதீரங்களையும், சாதனைகளையும் கண்டது.தமிழரின் சரித்திரம் தலைச்சிறந்த சரித்திர நாயகர்களை தன்னகத்தேக் கொண்டது.அவர்களுள்,மாமல்லன் என அழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன்,இராஜராஜன் எனப்பட்ட அருள்மொழிவர்மன்,அவரின் புதல்வன் இராஜேந்திர சோழன்,ஆகியோர் தமிழக வராலாற்றில் மட்டுமின்றி தமிழரின் வரலாற்றிலும் புகழ் பெற்றவர்கள். அதிலும் இராஜேந்திர சோழன் கடாரம்,கம்பூச்சியம்,சாவகம் என் கடல் கடந்த தேசங்களில் எல்லாம் புலிக்கொடியை பறக்கவிட்டு,தமிழர் புகழ் உலக வரலாற்றிலும் நிலைத்து நிற்க செய்தவர்.இதையெல்லாம் அறியும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை தலைத்தூக்கும்ம்.அதே வேளையில், இராஜராஜ சோழனை பற்றியோ,இராஜேந்திர சோழனை பற்றியோ, மாமல்லனைப் பற்றியோ பேசும்பொழுது,யார் அவர்கள் என்று ஒரு தமிழன் கேட்டால்,என்னவென்று சொல்வது??

ஆனால்,அதுதான் உணமை.
நிகழப்போகும் உண்மை.

இன்றுள்ள நாம்,கல்கியின் பார்த்திபன் கனவையோ,பொன்னியின் செல்வனையோ, அகிலனின் வேங்கையின் மைந்தனையோ படித்து விட்டு சரித்திரம் பேசலாம்.ஆனால் தற்பொழுதுள்ள இளையோரிடமோ,பள்ளி மாணவர்களிடமோ பொன்னியின் செல்வன் என்று சொன்னால்,கண்டிப்பாக அது தமிழ் திரைப்படம் என்று சொல்வார்களே தவிர,பொன்னியின் செல்வன் என்பது உணமையான சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நவீனம் என்பதை அறியமாட்டார்கள்.இவ்வாறு சரித்திரம் மறந்த இனம் உருவாகையில் வருங்காலம் அந்த இனத்துக்கு என்ன வைத்திருக்கும்??
ஒவ்வொரு தமிழனுக்கும்,தனது இனத்தின் சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும்.

எனது பாட்டன்,பூட்டன் காலத்தில் தமிழன் தமிழகத்திலிருந்து சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டான்.மலாய சுதந்திர பேச்சுகளில் வி.தி.சம்பந்தன் என்ற தமிழரும் பங்கு கொண்டார் என்று மட்டும் தெரிந்திருப்பதை விடுத்து,தமிழினத்தின் பூர்வீகம்,அவனின் தொன்றுதொட்ட வரலாறு என்று அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தால்தான் தனித்தன்மை மிக்க தமிழன் நாளை தலைநிமிர்வான்.சரித்திரத்தை மறந்த இனமும், சரித்திரத்தை மற்றிக்கூறும் இனமும் சரித்திர சுவடே இல்லாமல் அழிந்து போகும் என்பதுதான் தின்னம்.


இந்தோனேசியா,ஜாவாவில் அமைந்துள்ள பிரம்பனன் ஆலய தொகுதி

500-600 வருட சரித்திர பின்னணியைக் கொண்ட மலாய சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியைத்தான் நமது மாணவர்கள் ஆரம்பக்கல்வி முதற்கொண்டு மேல்நிலைப் பள்ளி வரையில் பயில்கின்றனர். மாற்றாரின் குறுகிய சரித்திரத்தை பயிலும் நம் தமிழன்,நமது நெடுநீண்ட சரித்திரத்தை பயிலாமல் மறக்க விட்டது,கல்வியமைச்சில் தமிழ் பாடப்பிரிவிற்கு பொறுப்பேற்றிருக்கும் நமது இன அதிகாரிகளின் தவறா??
தமிழன் சரித்திரம் படித்தால் தலை நிமிர்ந்து விடுவான், தலை நிமிர்ந்தால் நமது பதவிக்கு ஆப்பு வந்துவிடும் என்று கண்டும் காணாமல் விட்ட சமுதாயத்தின் அரசியல் தலைவர்களின் தவறா??
தமிழ் சரித்திரம் கொண்டே தமிழரை மீண்டும் தலைநிமிர வைக்க முடியும் என்று உணராமல் விட்டுவிட்ட தமிழ் வழி இயக்கங்களின் தவறா??
யார் தவறு??

நாளை தலையெடுக்கப்போகும் நம் தமிழன்,சரித்திரம் தெரிந்த, தனித்தன்மையுடைய தமிழனாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது அவா.
அவ்வாறு ஒரு சரித்திரம் தெரிந்த தமிழினத்தை எப்படி உருவாக்குவது??என்பதுதான் தற்போது நம்மிடம் நிலவும் கேள்வி,இந்த கேள்விக்கு ஒரே பதில்;தமிழ் பள்ளிகளின் மூலம் என்பதுதான்.

தமிழ் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் தமிழ் வரலாறும் ஒரு பாடமாக கற்றுகொடுக்கப் பட வேண்டும்.இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் தமிழரின் வரலாறு புரியும் வண்ணம் தமிழ் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும்.உதாரணத்திற்கு,அறிஞர் மு.வ-வின் பாவை விளக்கு நவீனம் தற்பொழுது எஸ்.டி.பி.எம் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. அறிஞர் மு.வ-வின் சமுதாய கருத்துகள் மாணவர்களுக்கு தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.ஆனால், அதே வேளையில் இன அடையாளம் அழியாமல் இருக்க வேண்டுமெனில், சரித்திரமும் முக்கியமல்லவா? ஆகவே,கல்கியின் பொன்னியின் செல்வனையோ, பார்த்திபன் கனவையோ,சிவகாமி சபதத்தையோ அல்லது மற்ற தமிழ் சரித்திர அற்ஞர்களின் நவீனத்தையோ புதிதாக பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம்.

இடைநிலை,மேல்நிலை கல்வியை விட அடிப்படைக்கல்வியான ஆரம்ப பள்ளி பாடத்திட்டத்திலேயே தமிழ் சரித்திரம் சேர்க்கப்பட்டால்தான்,மிக சிறப்பாக அமையும்.

"தமிழ்ப்பள்ளியில் தமிழர் சரித்திரம்"
சாத்தியமா??
எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது??
யார் பொறுப்பேற்பது??

அடுத்த பதிவில் அலசலாம்.

- தொடரும் -


*பின்குறிப்பு :
நண்பர்களே,தமிழ் பள்ளியில் தமிழர் சரித்திரம் போதிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??
உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

9.8.08

ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் மலேசிய தமிழர்கள் - முழுமையாக

இக்கட்டுரையானது,பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி அவர்களால் சில வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. தமிழாக்கம் மட்டுமே எமது.

நன்றி : தமிழ்கனேடியன்.காம்
thanks :
http://www.tamilcanadian.com/

தமிழீழம்
தமிழ் தேசியம்;இதுதான் நீண்டதொரு போராட்டத்தை மேற்கொண்டு வரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தமிழீழ போராட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது.புலிகளின் தலைவர் பிரபாகரன் பலமுறை கூறியுள்ளார்,"ஈழம் உருவாகும் நாளதான்,உலக தமிழினத்தின் வெற்றி நாள்" என்று.புலிகளின் இந்த கருத்தானது உலக அரங்கில் தமிழீழ போராட்டத்துக்கு பலமானதொரு அடித்தளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.இந்த கருத்தின் மூலம்தான் உலகத்தில் வாழும் பெரும்பாலான தமிழர்களின் மத்தியில் தமிழீழத்திற்கான ஆதரவு பெருகியுள்ளது.சிங்கள இனவாதத்தை எதிர்த்து போராடும் புலிகளுக்கு,வெறும் மானசீக ஆதரவு என்பதைவிட, பொருளாதார, அறிவுசார் ஆதரவும் இந்த கூற்றின் மூலமே பெருகியுள்ளது என்பது உண்மையாகும். மலேசிய தமிழர்கள் என்று பார்த்தோமானால், தமிழீழம் உருவாவதை இவர்கள் பெரிதும் ஆதரிக்கிறார்கள்.

மலேசிய தமிழர்கள்,பிரிட்டிசாரால் சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டவர்கள்.மலேசிய மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 சதவீதம் தமிழர்கள்,அதாவது 17 இலட்சம் பேர்.இவர்களில் மிக சிறுபானமையாக உள்ளோர்,இலங்கையிலிருந்து (சீலோன்) பிரிட்டிசாரால் அலுவலக வேலைகளுக்கு கொண்டு வரப்பட்டவர்கள், இவர்களை சீலோனிஸ் என்றும் யாழ்ப்பாண தமிழர்கள் என்றும் அழைக்கிறார்கள்.இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும்-இலங்கை வம்சாவளியினருக்கும் பொதுவில் ஒரு வேறுபாடு நிலவி வந்தது.பொருளாதார, சமூக பின்னணியில் இந்த வேறுபாடு அமைந்திருந்தது.பெரும்பாலான இலங்கையர்கள், தோட்டப்பாட்டாளிகளான தமிழர்களிடம் பழகுவதில் இருந்து விலகியிருந்தனர்.பாட்டாளி தமிழர்களோ, இலங்கைத்தமிழர்கள் காலனித்துவ பிரிட்டிஷ் முதலாளிகளிடம் வைத்திருந்த விசுவாசத்தை சுட்டிக்காட்டி அவர்களிடம் நெருங்கவதில் இருந்து தவிர்த்து வந்தனர்.

ஈழப்போரால்,தற்பொழுது பெரும்பாலான இலங்கையர்கள்(சீலோனிஸ்) தங்களை தமிழர்கள் என்றே அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். நெடுங்காலமாக மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும், இலங்கை வம்சாவளி தமிழர்களுக்கும் இடையில் நிலவிவந்த வேறுபாட்டை ஈழப்போர் கலைந்துள்ளது என்றே கூற வேண்டும்.இந்த வேறுபாடானது தற்பொழுதும் நிலவுகின்ற போதிலும்,இன அடையாளத்தின் பேரில் இந்த இரு வேறு வம்சாவளி பின்னணியைக் கொண்ட தமிழர்கள் ஒன்றாகியுள்ளனர்.

ஆரம்பக்காலங்களில்,இலங்கை வம்சாவளி தமிழர்கள் ஈழப்போராட்டத்துக்கு தனியாளாகவோ,குழுக்களாகவோ பொருளாதார ஆதரவை வழங்கி வந்தனர். இந்திய வம்சாவளி தமிழர்களின் ஈழ போரட்டத்துக்கான ஆதரவு, மலேசியாவில் தமிழீழ போராட்டத்துக்கான ஆதரவில் புதியதோர் பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ போரட்டத்துக்கான ஆதரவு தற்பொழுது வெளிப்படையாகவே உள்ளது.உலக தமிழர் புனர்வாழ்வு நிதியமைப்பு போன்ற அமைப்புகளின் உதயமானது, ஈழப்போராட்டத்துக்கு மலேசிய தமிழர்களிடம் உள்ள ஆதரவை வெளிப்படுத்துகிறது.

ஈழப்போராட்டத்துக்கான ஆதரவு தற்பொழுது பல வடிவங்களில் மலேசிய தமிழர்களின் மத்தியில் பிரபலமாகியுள்ளது. கருத்தரங்குகள்,நிதி சேகரிப்பு நிகழ்வுகள்,பொதுக்கூட்டங்கள் போன்றவற்றின் மூலம் ஈழப்போராட்டம் மலேசிய தமிழர்கள் மத்தியில் மிக பிரபலமாகியுள்ளது. மலேசியாவில் தமிழர்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய பெருநாள்,தைப்பூசத்திருநாள் ஆகும்.ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருநாள் கொண்டாடப்படும்பொழுதும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கூடும் கோலாலம்பூரில் உள்ள பிரபல ஆலயத்தில் ஈழ அகதிகளுக்காக நிதி சேகரிப்புகள்,கையேடு வழங்குதல் போன்ற நிகழ்வுகளுக்கு ஆலய நிர்வாகம் தனியாக ஓர் இடத்தை ஒதுக்கித்தரும்.ஈழப்போரைப்பற்றிய குறுந்தகடுகளும் இவ்வேளையில் விற்கபடும்.

இவ்வாறான நிகழ்வுகளின் மூலம்,ஈழப்போராட்டம் மலேசிய தமிழர்கள் மத்தியில் மிக முக்கிய இடமொன்றை பிடித்துள்ளது.இனவாத இலங்கை அரசின் பொய்யுரைகளை மலேசிய தமிழர்கள் பெரிதுப்படுத்துவதில்லை. அண்மையக்காலமாக ஈழப்போராட்டத்துக்கான ஆதரவு பெருகியுள்ளதே தவிர,குறையவில்லை.

மலேசிய தமிழர்கள் ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதற்கு மிக முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன.முதல் காரணம், ஈழத்தமிழர்களைப் போலவே மலேசிய தமிழர்களும் பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தால் பிழிந்தெடுக்கப் பட்டவர்களே.இவர்களுக்கு,தங்களது ஈழ சகோதரர்கள் படும் இன்னல்கள் புரிகின்றது. தங்களைப்போலவே அநீதி இழைக்கப்பட்டவர்களாக பாட்டாளி மலேசிய தமிழர்கள்,ஈழத்தமிழர்களைப் பார்க்கிறார்கள். இதனால்தான்,நடுத்தர வர்க்கத்தைவிட இவர்கள் தமிழீழ போரட்டத்தை அதிகமாக ஆதரிக்கிறார்கள். மலேசிய தமிழ் இளையோர் மத்தியில்,புலிகளின் தலைமையின் மீது ஓர் அசைக்க முடியாத பற்று உள்ளது.அதிலும்,புலிகளின் தலைவர்,பிரபாகரன் அவர்களை ஓர் நாயகனாக பார்க்கிறார்கள். பிரபாகரனின் படத்தை பெரும்பாலான தமிழர்களின் வீட்டில் சர்வ சாதரணமாக பார்க்கமுடிகிறது.கடந்த காலங்களில்,ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈழ ஆதரவு போரட்டங்களின் போது,பிரபாகரனின் படத்தை இளையோர்கள் ஏந்தியிருந்தது, மலேசிய காவல் துறைக்கு கோபத்தை உண்டுப்பண்ணியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது காரணம்,மலேசிய தமிழர்கள் மத்தியில் நிலவும் அரசியல்,பொருளாதார,சமூக பின்னடவுகள்.இந்நாட்டை வளமாக்க உழைத்து உருகுலைந்து போன தமிழினத்தை மலேசிய அரசாங்கம் ஒரு பொருட்டாக கருதாது.மற்ற இனங்களைப்போல்,தமிழினம் எந்தவொரு துறையிலும் தலைத்தூக்க முடியவில்லை. பெரும்பானமை மலாய் இனத்தை அரசாங்கம்,தனது கொள்கைகளின் மூலம் மிக பாதுக்காப்பாக வைத்துள்ளது.சீனர்களோ,பொருளாதார வளத்தைக்கொண்டுள்ளனர். தமிழர்களோ,உழைத்து ஓடானதுதான் மிச்சம் என்ற நிலை நிலவுகிறது. பொருளாதரத்தில்தான் பின்னடைவு என்றால்,வேலை வாய்ப்புகளிலும் அப்படிதான்.அரசு துறைகளிலோ,தனியார் துறைகளிலோ தமிழர்களை மிக குறைவாகவே வேலைக்கு எடுக்கின்றனர்.

மலாய் இனத்துக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கும் கொள்கைகளை கொண்டுள்ளதுதான் மலேசிய அரசின் கொள்கைகள்.இந்த கொள்கைகளின் மூலம் அனைத்து துறைகளில் உள்ள தமிழர்களுக்கும் பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது.கலாச்சாரத்திலும் அரசின் தலையீடு தலைத்தூக்கியுள்ளது.வழிபாட்டுத்தளங்களைக் கூட இழக்க வேண்டிய நிலையில் உள்ளது மலேசிய தமிழினம்.சமுதாய தலைவர்கள் என்று தங்களை பாறைசாற்றிக்கொண்டவர்களோ,தங்கள் சமுதாயத்திற்காக எந்தவொரு அநியாயத்தையும் தட்டிக் கேட்காமல அரசாங்கத்தின் அடிவருடிகளாகவே உள்ளனர்.பெரும்பானமை மலாய் இனத்தோரிடம் அனுக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு தங்களது சுயநலத்தை மட்டுமே பேணி வந்துள்ளனர்;சமுதாய நலனை மறந்தே விட்டிருந்தனர் இந்த சமுதாயத்துரோகிகள்.இது போன்றதொரு சூழ்நிலையில்,உரிமைக்காக போராடும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பெரும்பாலான இளைய தமிழர்கள் தங்களுடைய மானசீக இயக்கமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மூன்றாவது காரணம்,புலிகளின் தன்னலமற்ற போரட்டத்தின் மீது தமிழர்களுக்கு உள்ள ஈர்ப்பு.புலிகள் இயக்கத்தின் போராட்டம்,புலி உறுப்பினர்களின் கட்டுக்கோப்பு,அவர்களின் வெற்றிகள் மலேசிய தமிழர்களின் மத்தியில் புலிகள் இயக்கம் பிரபலமாக மிக முக்கிய காரணங்கள்.மலேசியத் தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறார்கள்,இதற்கு காரணம்,உலக அரங்கில்,தமிழர்கள் என்றாலே புலிகள் என்ற கருத்து நிலவுவதால்.

புலிகளின் தலைமைத்துவத்தின் மீது ஓர் அபரீதமான பற்றைக் கொண்டுள்ளனர் மலேசிய தமிழர்கள்.இதற்கு முக்கிய காரணம்,மலேசியாவில் நெடுங்காலமாக கோலேச்சி வரும் தமிழ் தலைவர்களின் சுயநல தன்மையும், முற்போக்கில்லா சிந்தனையும்தான்.மலேசிய தமிழர்களின் தலைவர்கள்,என்று தங்களை பாறைசாற்றிக்கொள்ளும் தலைவர்கள்,தங்களின் சுயநலத்தை முன்படுத்தி சிறுபான்மை தமிழர்களின் உரிமைகளை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனர்.ஆளும் பெரும்பான்மை மலாய் கட்சியோடு சேர்ந்து கொண்டு,சொந்த இனத்திற்கு சொந்தமான அனைத்தையும் தங்களின் பதவி சுகத்திற்காக விற்றே விட்டிருந்தனர்.ஒரு கசப்பான உண்மை என்னவென்றால்,காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டதிலிருந்து மலேசிய தமிழ் சமூகம் அடைந்ததை விட இழந்ததுதான் அதிகம்.மலேசிய தமிழர்களின் பொதுநலனை காக்க குறிப்பிட்டு சொல்லும்படி எந்தவொரு அரசியல் கட்சியோ, எந்தவொரு இயக்கங்களோ செயல்படவில்லை.தங்களது சுயநலனுக்காக மொத்த இனத்தையும் கூறு போட்டனரே தவிர,உரிமைகளை மீட்டெடுக்க,அநீதியை எதிர்க்க யாருக்கும் விருப்பம் இல்லை.சொந்த இனத்தின் உரிமைகளை விட்டுகொடுத்து விட்டு மலேசியாவின் ஆளும் கட்சியின் இனவாத அரசியலுக்கு ஆதரவளித்தார்களே அன்றி,மலேசிய தமிழ் சமுதாயத்தின் அரசியல்,பொருளாதார,சமூக மேம்பாட்டைப் பற்றி யாரும் கேட்கவும் இல்லை,அதற்காக கவலைப்படவும் இல்லை.

மலேசியாவில் வாழும் தமிழர்களில் ஏறக்குறைய 75 சதவீதம் பேர்,குறைந்த அல்லது நடுத்தர வருமானத்தை பெருபவர்கள்.இவர்களில் பெரும்பாலோர், தோட்டப்புறங்களிலும் புறநகர் பகுதியிலும் வாழ்கிறார்கள்.மலேசிய தமிழர்களின் சொத்துடமை,வெறும் 1.5 சதவீதம் மட்டுமே;இதிலும் பெரும் பகுதி பாட்டாளி தமிழ் வர்க்கத்தைப் பற்றியோ,அவர்களின் போரட்டத்தைப் பற்றியோ கவலைப்படாத பணக்கார தமிழர்களையே சேரும்.

மொத்தத்தில்,ஏறக்குறைய 100 ஆண்டுகளாக தமிழர்கள் சுரண்டப்பட்டனர், ஏமாற்றப்பட்டனர்.இனிவரும் காலங்களில் இந்த சுரண்டல்களும் ஏமாற்று நாடகங்களும் தொடருமானால்,மலேசிய தமிழர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை வேறுவிதமாக அமையக்கூடும்.ஒரு முன்னாள் அரசியல்வாதி கூறியதைப் போல்,"தமிழர்கள் நாங்கள் ஏழைகளாக இருக்கலாம், கோழைகள் அல்ல",என்ற கூற்றுக்கேற்ப எதுவும் சாத்தியம்.அண்மையில் நடைபெற்ற ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ் கலாச்சார நிகழ்வின் போது ஒரு மாணவரின் உரையும் இதைத்தான் பிரதிபலிக்கிறது. அம்மாணவர் கூறினார், "இனியும் எங்களின் கல்வி,கலாச்சார சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசாங்கம் கண்மூடித்தனமாக நடந்துக்கொள்ளுமானால்,எங்களுக்கு வேறு வழியில்லை, எங்களுக்கென்று தனிக்கொடி பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை."