7.7.08

அமைச்சரை சந்திக்க மறுத்தார் உதயா.....


கடந்த சனிக்கிழமை கமுண்டிங் தடுப்பு முகாமுக்கு இந்த்ராஃப் தலைவர்களை சந்திக்க வந்த உள்துறை அமைச்சர் சையட் அமீட் அல்பாரை சந்திக்க மறுத்துள்ளார் உதயக்குமார் அவர்கள்.

உதயா அவர்கள்,தனது குடும்ப உறுப்பினர்களின் வழி தெரிவித்த செய்தியில் கூறியிருப்பதாவது :

"எனது போராட்டத்தின் நோக்கம் மிக தெளிவாக இருக்கிறது;எந்த காரணத்தை கொண்டும்,யாரிடமும் என்னை விரைவில் சிறையிலிருந்து விடுவிக்க சொல்லி கெஞ்ச நான் தயாராக இல்லை."

நாடுகடந்து வாழும் உதயக்குமாரின் சகோதரர் வேதமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

"மக்களுக்கு நான் ஏன் அமைச்சரை சந்திக்க மறுத்தேன் என்பது தெரிய வேண்டும்.அவற்றுள் மிக முக்கிய காரணங்கள்,பின்வருமாறு :
  1. அமைச்சரின் நோக்கம் ஒன்றுதான்,இந்த்ராஃப் தலைவர்கள் தாங்கள் மாறிவிட்டதாக கூறி விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என் கோரினர் என்ற பரப்புரை செய்யலாம்.

  2. இந்த்ராஃப்-இன் போராட்டத்தில் இருக்கும் உண்மையை நான் அறிவேன்,ஒரு போதும் இந்த போராட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நான் வருந்தியதில்லை.

  3. இதற்கு முன்னர்,இதே அமைச்சர் இந்த்ராஃப் மீது பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.மக்கள் மத்தியில் இந்த்ராஃப் ஒரு தேசவிரோத அமைப்பு என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

  4. எனது இந்த போராட்டமானது,கடந்த 51 வருடங்களாக இனவாத அம்னோ அரசாங்கத்தால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு,தொடர்ச்சியாக காலனித்துவப்படுத்தப்பட்ட இந்திய சமுதாயத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நடத்தப்படும் நீதி போராட்டம்.இதற்காக அனைத்து தியாகங்களையும் செய்ய நான் தயார்.

இந்த்ராஃபின் ஆதராவாளர்கள் அனைவரும் தங்களது போராட்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.மலேசிய இந்திய சமுதாயத்திற்கு நாம் செய்யும் இந்த சேவையை எண்ணி நாம் பெருமைக்கொள்ள வேண்டும்.

எங்களுக்கெதிராக பாவிக்கப்பட்டிருக்கும் கொடுங்கோல் இசா சட்டம், எவ்வாறெல்லாம் இந்த நாட்டு இந்தியர்களை அம்னோ அரசாங்கம் தொடர்ந்து நசுக்குகிறது என்பதை வெளி உலகத்திற்கு படம் பிடித்து காட்ட வேண்டும். போராட்டம் ஒயாது."

இவ்வாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நீதி கேட்டு மலேசியாவின் கோலாலம்பூர் சாலைகளில் குவிந்த இந்தியர்களின் பேரணியை ஏற்பாடு செய்ததன் வழி,நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த்ராஃப் தலைவர்கள் ஐவர்,உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த்வொரு விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த்ராஃப் அமைப்பையும்,அதன் தலைவர்களையும் நாட்டிற்கு அச்சுறுத்தல் என்று அம்னோ அரசாங்கம் அறிவித்திருந்தது.உரிமைப்போராளிகளை சிறையில் அடைத்ததால் வெகுண்ட இந்திய சமுதாயம்,இம்முறை தேர்தலில் எதிர்கட்சிகளின் பக்கம் சாய்ந்ததால்,அம்னோ அரசாங்கம் 6 மாநிலங்களையும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இழக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய பதிவில்,இரங்கராஜ நம்பியின் கொள்கை பிடிப்பைக் கண்டு வியந்தேன்.தற்காலத்தில் நம்பியைப் போல் பிடிப்புள்ள மனிதர்கள் இருப்பார்களா என்று வியந்தேன்.

இருக்கவே,இருக்கிறார் எங்கள் உரிமைப்போராளி உதயக்குமார்.

அவரின் போராட்டம் ஒயாது,அவரை விடுவிக்க சொல்லி நாங்கள் நடத்தும் போராட்டமும் ஒயாது.எங்கள் இலக்கெல்லாம் ஒன்றுதான்,மலேசிய திருநாட்டில் இந்திய சமுதாயம் மற்ற இனங்களுக்கு நிகராக தலைநிமிர வேண்டுமென்பதே.உதயாவைப் போல் கொள்கை பிடிப்புள்ள தலைவன் எங்களை வழிநடத்தும் வரை எங்கள் போராட்டம் தோற்காது!!

வாழ்க மக்கள் சக்தி,ஓங்குக மக்கள் குரல்!!

No comments: