3.3.09

மலேசிய தமிழர்களே.... ஈழத்தமிழரை காக்க பட்டவொர்த்தில் நாம் ஒன்றிணைவோம்


எதிர்வரும் 7-03-2009 அன்று பட்டவொர்த் ஹஜி அகமாட் படாவி மண்டப திடலில் நடைபெறவுள்ள, "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற நிகழ்வில் தமிழர் என்ற அடையாளத்தில் நாம் ஒன்றிணைவோம். எமது ஈழத்தமிழ் சகோதரர்கள் சந்திக்கும் இன்னல்களை போக்க நம்மால் இயன்ற காரியத்தை செய்வோம்.

இதுவரை மலேசிய அரசாங்கமோ, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்திய பிரதிநிதிகளோ, செய்யாத ஒரு அரும்பெரும் காரியத்தை பினாங்கு மாநில அரசு செய்ய முன்வந்திருக்கின்றது. "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" நிதி சேகரிப்பு மற்றும் கண்டன ஒன்றுகூடலின் அன்று பினாங்கு மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள் ஒரு மிக முக்கிய அறிவிப்பை செய்யவுள்ளார். தென்கிழக்காசிய பிராந்தியத்தில், தமிழீழ மக்களின் துன்பங்களை துடைக்க குரல் கொடுக்கும் முதல் அரசு, பினாங்கு மாநில அரசு என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

மலேசிய தமிழர்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டத்தை பினாங்கு மாநில அரசின் இம்முயற்சி பிரதிபலிக்கிறது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இராஜபக்சேவின் இனவெறியாட்டத்தை கண்டிக்கும் வண்ணம் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழர்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டு, ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்க குரல் எழுப்ப வேண்டும் என்பதே எமது அவா. நிகழ்வின் விவரங்கள் :-

தேதி : 07-03-2009 (சனிக்கிழமை)
இடம் : ஹஜி அகமாட் படாவி மண்டப திடல்,பட்டவொர்த்
நேரம் : மாலை 7.45க்கு மேல்

மேல் விவரங்களுக்கு 016 - 438 4767 என்ற எண்ணில் எம்மை தொடர்பு கொள்ளவும்.

நன்றி,
மு.சத்தீஸ்,
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி

No comments: