18.4.08
அலரும் அமீட் அல்பார்.....
இந்த கூற்றை தொடர்ந்து மலேசிய அரசாங்கம் அனைத்துலக பொது மன்னிப்பு சபையின் மீது சீறிப்பாய்கிறது.மலேசிய காவல்துறையின் துணைத்தலைமை ஆணையர்,இந்த கூற்று உண்மையற்ற ஒன்று என்று கூறியிருந்தார்.இதனைத் தொடர்ந்து மலேசிய உள்துறை பாதுகாப்பு அமைச்சரான,சைய்ட் ஹமிட் அல்பார்,அனைத்துலக பொது மன்னிப்பு சபையின் அறிக்கை,பொய்யான அறிக்கை என்றும்,ஆதரமற்ற கூற்று என்றும் சீறிப்பாய்கிறார். “அனைத்துலக பொது மன்னிப்பு சபைக்கு யார் இந்த தகவல்களை தந்தனர்??அவர்கள் நமது நாட்டில் வந்து ஆய்வு செய்தனரா??அனுமானத்தின் பேரிலெல்லாம் அறிக்கை வெளியிடக்கூடாது” என்றெல்லாம் அலறுகிறார் மாண்புமிகு அமைச்சர்.
அனைத்துலக பொதுமன்னிப்பு சபையின் அறிக்கையானது 16-04-2008 அன்று வெளியிடப்பட்டது.அன்றைய தினம் காலை,திருமதி சாரா லிலி அவர்கள் பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்தின் முன்பு,நான்கு வருடங்களுக்கு முன்பு போலிஸ் காவலில் இருந்தபொழுது இறந்த தனது மகன் பிரான்சிஸ் உடையப்பனுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.பிரான்சிஸ் காவல் நிலையத்திலிருந்து தப்பிச்சென்று ஆற்றில் குதித்து இறந்து விட்டதாக போலிஸ் தரப்பு கூறியது.சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு கிள்ளான் ஆற்றில்,அவரின் உடல் சிதைந்த நிலையில் கிடைத்தது.மரண விசாரணை நீதிமன்றத்தை நாடிய சாராலிலிக்கு கிடைத்த பதில் “பிரான்சிஸ் மரணத்தில் எந்தவொரு சூதும் நிகழவில்லை” என்ற பதில்தான்.இந்த தீர்ப்பை எதிர்த்து சாராலிலி தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கில் சாராலிலி அவர்களின் சார்பாக வாதாடியவர் வழக்கறிஞர் உதயக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்சிஸ் உடையப்பன் சம்பவம் மட்டுமல்ல,இதைப்போன்ற இன்னும் பல சம்பவங்கள் நடந்தன.போலிஸ் தடுப்புக்காவலில் மர்மமாக இறந்தோரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.இந்த மரண சம்பவங்களுக்கு எல்லாம் காவல்துறையினர்தான் முழுக்க,முழுக்க காரணம் என்று யாரும் கூறவில்லை.ஆனால் போலிசும் ஒரு காரணம் என்றுதான் அனைத்துலக மன்னிப்பு சபையின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.காவல்துறையின் மர்ம கொலை நடவடிக்கைகள் இருக்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது.இதற்கே மலேசிய போலிசுக்கும்,அரசாங்கத்திற்கும் வியர்த்து விட்டது.எங்கே,அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் மலேசியாவிற்குள் வந்து இரகசிய விசாரணைகள் நடத்தி விடப்போகின்றனர் என்ற பயம்தான் இந்த வியர்த்தலுக்கு காரணம்.
மலேசியாவில் அனைத்துலக பொதுமன்னிப்பு சபை கூறுவதுபோல் மர்ம கொலைகளில் காவல்துறை ஈடுபடவில்லையென்றால்,நேரடியாக, அனைத்துலக பொதுமன்னிப்பு சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ள கூற்றுகளை முடிந்தால் ஆதரத்தோடு முன்வைக்குமாறு சவால் வைக்கலாம் அல்லவா??
ஏன் அவ்வாறு செய்ய மலேசிய அரசாங்கத்திற்கு தோன்றவில்லை??
மலேசிய அரசாங்கத்தின் மீதும்,மலேசிய காவல்துறையின் மீதும் படிந்துள்ள கரையை நீக்க அது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையுமல்லவா??
இதை தவிர்த்து மற்ற சில கேள்விகளும் நம்முள் தோன்றலாம்,அவற்றில் மிக முக்கியமானது,
அனைத்துலக பொது மன்னிப்பு சபை கடந்த சில வருடங்களாக மலேசியாவில் தனது அலுவலகத்தை நிர்மாணிக்க அனுமதி கோரிய போதிலும்,தொடர்ந்து அதற்கான அனுமதி மறுக்கப்படுவது ஏன்??
அதைவிட மிக முக்கியமானது என்னவென்றால்……
அனைத்துலக பொதுமன்னிப்பு சபையின் அறிக்கைக்கு பதில் அளிப்பதை விடுத்து,அனைத்துலக பொது மன்னிப்பு சபையின் மீது ஏன் சீறிப்பாய வேண்டும்??
இதற்கெல்லாம் சைய்ட் ஹமிட் அல்பார் பதில் சொல்ல மாட்டார்,காரணம் உண்மைகளுக்கு பதில் சொல்ல தெரியாத அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்தான் இந்த உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர்.
3.4.08
தொடர்ந்தும் புறக்கணிக்கபடுவோமா??(பாகம் 1)

மக்கள் கூட்டணி 5 மாநிலங்களில் ஆட்சியமைத்து இன்னும் முழுதாய் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில்,இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் முடிவுகளானது இந்தியர்கள் மத்தியில் எமாற்றம் கலந்த சந்தேகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.அதுதான் இந்த ஆய்வு கட்டுரையின் தலைப்பாகும்."தொடர்ந்தும் நாம் புறக்கணிக்கப்படுவோமா??"என்பதுதான் அந்த சந்தேகம்.தொடர்ந்து புதிர்கள் போடாமல் அந்த கட்சி எதுவென்ற விஷயத்திற்கு வருகிறேன்.
ஜனநாயக செயல் கட்சிதான்(DAP) நான் மேற்குறிப்பிட்ட சந்தேகத்தை ஏற்படுத்தும் கட்சி.இக்கட்சியின் அண்மைய சில முடிவுகள் நம்மை ஏமாற்றத்தை அளிக்கிறது என்றால் அது மிகையாகது.பினாங்கு மாநிலத்தில் 3இல் 2 பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்துள்ள மக்கள் கூட்டணி அரசை அதிகமாக குறை கூற முடியாது.ஏனென்றால், இம்மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் தேர்தலுக்கு முன்பே தங்களின் போரட்டத்தை தொடங்கி விட்டனர் என்பதுதான் உண்மை.தேர்தலுக்கு முன்பு,இந்தியர்களுக்கு ஜசெக ஒதுக்கிய இடங்கள் இரண்டு மட்டுமே,
1.பாகான் டாலாம் தொகுதியில் தனசேகரன்;
2.டத்தோ கெராமாட் தொகுதியில் ஜக்டீப் சிங்
இவ்விருவர் மட்டுமே முதல் கட்ட வேட்பாளர்கள் ஆவர்.ஜசெகவின் இந்த முடிவானது,இந்தியர்களின் பாரம்பரிய தொகுதியான பிறையை இந்தியர்களிடமிருந்து பறிப்பதற்கு ஒப்பாகும்.முதன்முதலில் இந்த தொகுதியில் நிறுத்தப்பட இருந்தவர் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி சோங் எங் ஆவார்.இந்நிலையில்தான் பிரபல வழக்கறிஞரான திரு.S.N.ராயர் அவர்கள் ஜசெகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.பிறை தொகுதியில் தான் சுயேட்சையாக நிற்கப்போவதாக அறிவித்தார்.அன்று மாலையே ஜசெகவிடமிருந்து வந்தது அறிவிப்பு,பிறை தொகுதியில் பேராசிரியர் இராமசாமி அவர்கள் போட்டியிடுவார்.அதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீ டெலிமா தொகுதியும் திரு.S.N.ராயர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.S.N.ராயர் அவர்கள் தனது முந்தைய அறிவிப்பிற்கு மன்னிப்பும் தெரிவித்தார்.ஆக மொத்தத்தில் பினாங்கில் ஜசெகவின் இந்திய வேட்பாளர்கள் 4 பேர் ஆயினர்.(இந்த 4 பேரும் தற்பொழுது பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர்.)இந்த 4 பேர் மட்டுமல்லாமல் பத்து உபான் தொகுதியில் போட்டியிட்ட (Parti KeADILan Rakyat)மக்கள் நீதி கட்சியின் மாண்புமிகு ரவிந்திரன் அவர்களோடு சேர்த்து பினாங்கில் 5 இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
மாநில ஆட்சிக்குழுவிலும் 2 இந்திய பிரதிநிதிகள் அமையும் வாய்ப்பு அமைந்தது,ஆனால் பேராசிரியர் அவர்களை தவிர்த்து மற்ற எவரும் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் இல்லாததால்தான் பினாங்கில் ஒரே ஒரு இந்தியர் ஆட்சிக்குழுவில் உள்ளார்.(மற்ற நால்வரும் தங்களது தொழிலை இதற்கு காரணமாய் காட்டியுள்ளனர்)மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் முதல்முறையாக இந்தியர் ஒருவர் துணை முதல்வர் ஆனதும் பினாங்கில்தான்.இதே போன்றதொரு நிலைதான் மற்ற மக்கள் கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் இடம்பெரும் என்ற நம்பிக்கை சற்று தளர்ந்துள்ளது என்றே கூற வேண்டும்.சிலாங்கூர் மாநிலத்தில் ஒரே ஒரு இந்தியர்தான் ஆட்சிக்குழுவில் அமர்ந்துள்ளார்,அவரும் மக்கள் நீதி கட்சியை சேர்ந்தவரவார்.ஜசெக சார்பாக ஆட்சிக்குழுவில் அமர்ந்துள்ள அனைவரும் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அம்னோவின் இனவாதத்தை எப்பொழுதும் குறை கூறும் ஜசெக,சிலாங்கூர் மாநிலத்தில் தானும் இனவாதத்தை நிலைநிறுத்தியுள்ளதை எப்படி நியாயப்படுத்தப்போகிறது??
சிலாங்கூரின் துணை மந்திரி பெசார் பதவியை ஏற்படுத்த அம்மாநில சுல்தான் தற்பொழுது தடையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .ஒரு வேளை அவர் சம்மதித்தாலும் நிச்சயம் ஜசெக தனது சீன பிரதிநிதியைத்தான் முன்மொழியும் என்பது தின்னம்.இதே போன்றதொரு நிலைதான் பேராக் மாநிலத்திலும்.முதலில் 2 இந்தியர்களுக்கு ஆட்சிக்குழுவில் வாய்ப்பு என்று அறிவித்த ஜசெக,மாண்புமிகு சிவநேசன் ஒருவரை மட்டுமே ஆட்சிக்குழுவில் நியமித்தது.ஜசெகவின் இம்முடிவை எதிர்த்து புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவசுப்பிரமணியம்,தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.உடனே வருகிறது அறிவிப்பு,மாநிலத்தின் சட்டமன்ற சபாநாயகராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவார்; ஈப்போ மாநகர் மன்றத்தின் மேயராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவார்.மாநில சட்டமன்றத்தின் சபாநாயகர் என்பது இதுவரை எந்த இந்தியரும் வகித்திடாத ஒரு பதவி,அதுவும் அதிர்ச்சி வைத்தியத்திற்கு பிறகே சாத்தியமாகியுள்ளது.இதே போல் சிலாங்கூரில் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க யாரும் இல்லையே என்பதுதான் நமது தற்போதைய கவலை.ஒரு வேளை மாண்புமிகு மனோகரன் அவர்கள் தடுப்புக்காவலில் இல்லாமலிருந்தால் அவரே அந்த அதிர்ச்சி வைத்தியத்தை அளித்திருப்பாரோ??
"தொடர்ந்தும் நாம் புறக்கணிக்கப்படுவோமா??"
என்ற கேள்விக்கு,"புறக்கணிக்கப்படலாம்" என்பதே பதிலாக இருக்கும்,ஆனால் அப்படி நாம் புறக்கணிக்கப்படும்பொழுது நமக்காக குரல் கொடுப்பதற்கு நமது மக்கள் கூட்டணியில் உள்ள இந்திய "மாண்புமிகுக்கள்" நிச்சயம் இருப்பார்கள் என்று நம்பலாம்.இவர்கள் அனைவரும் மஇகாவின் "தாக் பா லா"(Tak Pe La) என்ற கலாச்சரத்தை பின்பற்றாமல் மக்கள் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.அப்படி இருப்பார்கள் என்றும் நாம் நம்பலாம்.அண்மையில் பேராசிரியர் இராமசாமி அவர்களை நான் சந்தித்தப்பொழுது கூறினேன், "ப்ரோஃப்(Prof),மஇகா நம்மை ஏமாற்றியதால்தான் அவர்களுக்கு பாடம் கற்பித்தோம்,அதே போல் இந்த மாநில அரசும் நம்மை ஏமாற்றாது என் எதிர்பார்க்கிறோம்,அப்படி ஏமாற்றினால்,நீங்க கோபித்துக்கொள்ளாதீர்கள்,இந்த அரசாங்கத்தை எதிர்த்தும் போராட நாங்கள் தயங்க மாட்டோம்!"அதற்கு பேராசிரியர் கூறினார்,
"நான்தான் அந்த போரட்டத்தில் முதல் ஆளாக இருப்பேன்!!"தொடந்தார்,"பதவி என்னப்பா பதவி;இதெல்லாம் இன்னிக்கு வரும்,நாளை போயிடும்;நமக்கு நம்ம சமுதாயம்தான் முக்கியம்;ஆடு,மாடு கூட YB ஆகலாம்பா,இதெல்லாம் சும்மா,நம்ம தமிழ் மொழியை,நம்ம இனத்தை,நம்ம பள்ளிகளை எப்படி முன்னேற்றனும்னு பார்ப்போம்,அதற்கு இந்த பதவி தடையா இருந்தா இதையும் துக்கிப்போட்டுட்டு போயிக்கிட்டே இருப்பேன்!!"
இவரை போன்றதொரு தலைவர் நமது சமுதாயத்திற்கு முன்பே கிடைத்திருந்தால் நமது சமுதாயம் எங்கோ போயிருக்கும் என்று எனக்கு தோன்றியது.என்னுடன் வந்திருந்த நண்பர் இந்த உரையாடலை கேட்டுவிட்டு மிகவும் அகமகிழ்ந்தார்.இந்தியர்களுக்கு வெகு நாட்களுக்கு பிறகு சரியான தலைமைத்துவம் அமைந்துள்ளது,அதை சரியாக நமது சமூகம் உபயோகித்துக்கொள்ளும் என்று நம்புவோமாக.
பேராசிரியர் மட்டுமல்ல,மக்கள் கூட்டணியில் உள்ள மற்ற இந்திய தலைவர்களும் இதே போன்றதொரு போராட்ட குணத்தைக் கொண்டவர்கள் என்பதை அவர்களோடு பழக எனக்கு கிடைத்த ஒரு சிறிய காலத்தில் உணர்ந்துள்ளேன்.ஆகவே,இந்தியர்களுக்கு எதிராக புறக்கணிப்புகள் தொடர்ந்தாலும் அவற்றை நாம் நிச்சயம் எதிர்த்து வெல்லுவோம் என நம்பலாம்.
எனது நம்பிக்கைக்கு காரணம் என்ன?!
அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.
13.3.08
பினங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி அவர்களிடம் அளிக்கப்படும் கோரிக்கை.
செயல்திட்ட வடிவமைப்பு
இந்திய இளைஞர்களை ஒன்றிணைத்தல்.-இந்திய இளைஞர்களை தொடர்ந்து குண்டர்கள் என்றும் செயல்திறன் அற்றவர்கள் என்று கூறி வந்த நிலை இன்றைய அளவில் பெரிதும் மாறியுள்ளது.இதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதில் நமது முழு கவனம் செலுத்தப்பட வேண்டும்.மக்கள் சக்தியின் தாக்கம் நமது இளைஞர்களின் மத்தியில் பெரிய மாற்றத்தை தருவித்துள்ளது.ஒற்றுமை நமது பலம் என்பதை இளைஞர்கள் உணர்ந்துள்ளனர்.இதனை தக்க வைக்க நாம் எடுக்க வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள்.
- தொகுதி வாரியாக கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்.
- வன்முறையை நமது சமுதாயத்தில் இருந்து விரட்டியடித்தல்.
- அரசாங்க துறைகளில்,நிறுவனங்களில் நமது இளைஞர்களுக்கு சரியான வாய்ப்புகளை உறுதி செய்தல்.
- இளைஞர்களுக்கு கல்வி,வேலை வாய்ப்புகள் பாரபட்சமின்றி கிடைப்பதை உறுதி செய்தல்.
- இளைஞர்கள் வணிகத்துறையில் ஈடுபட ஊக்குவித்தல்.
- வணிகக்கடன்கள்,ஆலோசனைகள் வழங்குதல்.
- இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவித்தல்.
- இளைஞர்களை சமூக சேவைகளில் ஈடுபடுத்துதல்.
- மாநில அளவில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்தல்.
- மாநில அளவில் இளைஞர் மாநாடு நடத்துதல்.
- இளைஞர்களிடம் தொடர்ந்து ஒற்றுமையை மேம்படுத்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல்.
தொகுதி வாரியாக கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்.
பிறை தொகுதியில் தொடங்கி அங்குள்ள இளைஞர்களை ஒன்றிணைக்கும் வண்ணம் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல்.இளைஞர்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு இதுவரை நிலவி வந்த கருத்து வேறுபாடுகளை கலைதல்.தொகுதி வாரியாக இளைஞர்களை ஒன்றிணைக்கும் முயற்சியானது இடைவிடாமல் தொடர்தல் வேண்டும்.
வன்முறையை நமது சமுதாயத்தில் இருந்து விரட்டியடித்தல்.
இளைஞர்களிடம் ஒற்றுமையை மேம்படுத்துதல் மூலம் வன்முறை கலாச்சரத்தை துடைத்தொழிக்க முடியும்.குண்டர் கும்பல் கலாச்சாரத்தின் பின் விளைவுகளை விரிவாக விவாதிப்பதன் மூலம் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.காவல்துறையின் உதவியுடன் குண்டர் கும்பல் நடவடிக்கைகளால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துதல்.
அரசாங்க துறைகளில்,நிறுவனங்களில் நமது இளைஞர்களுக்கு சரியான வாய்ப்புகளை உறுதி செய்தல்.
வேலையின்மைதான் நமது சமுதாய இளைஞர்களிடம் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை அறிய முடிகிறது.ஆகவே சரியான வேலை வாய்ப்புகள அமையும் பட்சத்தில் குண்டர்கும்பல்,கொள்ளை,போதைப்பொருள் போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதை குறைக்கலாம் என்று நம்புகின்றோம்.அரசாங்க துறைகளில்(MPSP,MPPP),அரசு சார்ந்த நிறுவனங்களில்(PBA,PPC,PBSB,PERDA)நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெறும் பட்சத்தில் சமூக சீரழிவுகளில் இருந்து அவர்கள் விலகி நிற்பார்கள் என்பது பொதுவான கருத்தாகும்.
இளைஞர்களுக்கு கல்வி,வேலை வாய்ப்புகள் பாரபட்சமின்றி கிடைப்பதை உறுதி செய்தல்.
நமது இளைஞர்களுக்கான கல்வி,வேலை வாய்ப்புகள் கடந்த பல ஆண்டுகளில் தொடர்ந்து பாரபட்சத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.அந்நிலை தொடர்ந்து நீடிக்கக்கூடாதென்பது நமது எதிர்பார்ப்பாகும்.நம் இளைஞர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப கல்வி,வேலை வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்;இதில் எந்த ஒரு ஓரவஞ்சனை நிகழாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்யவேண்டும்.நமது இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதை ஊக்குவித்தல்.
இளைஞர்கள் வணிகத்துறையில் ஈடுபட ஊக்குவித்தல்.
வணிகத்துறையில் நம் இளைஞர்களை ஈடுபடுத்துதல் மூலம் நமது சமுதாயத்தின் பொருளாதரத்தை மேம்படுத்த முடியும்.ஒரு குறிப்பிட்ட தொழில்துறையில் மட்டும் அவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்காமல் அனைத்து வகையான தொழில்துறைகளிலும் அவர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கவேண்டும்.
வணிகக்கடன்கள்,ஆலோசனைகள் வழங்குதல்.
நமது இளைஞர்களும் வணிகத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வண்ணம்,ஆலோசனைகள் வழங்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.இந்த குழுவில் தொழில்துறை,வணிகத்துறையில் வெற்றி பெற்ற இந்தியர்களை இக்குழுவில் இணைத்துக் கொள்ள வேண்டும்.தற்பொழுது வங்கிகளில் வழங்கப்படும் சிறுதொழில்களுக்கான கடனுதவி பெரும்பாலான இந்திய வணிகர்களுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.இந்த விடயத்தில் மாநில அரசு தலையிடுவது கடினம் என்பதால்,மாநில அரசே இது போன்ற கடனுதவி திட்டங்களை அறிமுகப்படுத்தி நமது இளைஞர்களை ஊக்குவிக்கலாம் என்பது நமது வேண்டுகோள்.
இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவித்தல்.
விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்களின் ஆர்வம் அனைவரும் ஒன்று.ஆனால்,விளையாட்டு துறையிலும் இனவாதம் தலைத்தூக்கியதால்தான் நமது திறமையான இளைஞர்கள் பலர் விளையாட்டுத் துறையில் சிறப்பாக வர முடியாமல் போனது என்பது உண்மை.இந்த நிலை இனிமேலும் தொடர கூடாது என்பதுதான் நமது விருப்பமாகும்.மாநில அரசு இவ்விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம் .இனவாதம் இல்லாமல் விளையாட்டளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.திறமையுள்ள இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதோடு,அவர்களை மேல் பயிற்சிக்கு அனுப்பிடவும் வேண்டும்.
இளைஞர்களை சமூக சேவைகளில் ஈடுபடுத்துதல்.
மாநில அளவில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்தல்.
மாநில அளவில் இளைஞர் மாநாடு நடத்துதல்.
இளைஞர்களிடம் தொடர்ந்து ஒற்றுமையை மேம்படுத்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல்.
9.3.08
அழிந்தது ஆணவம்....வென்றது மக்கள் சக்தி!!
50 வருடங்களாக மலேசிய திருநாட்டை இனவாதம்,ஊழல்,அக்கிரமம் ஆகியவற்றால் கட்டிப்போட்டிருந்த தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு மக்கள் பாடம் புகட்டிய நாள்!!
மலேசிய சரித்திரத்தில் முதல் முறையாக 2/3 பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைய போகிறது.அம்னோ அராஜகத்தால் கொதித்து போயிருக்கும் மக்கள்,அம்னோவிற்கும் அதன் அடிமை கூட்டணி கட்சியினருக்கும் சரியான பாடம் புகட்டி உள்ளனர்.ஆட்சி தங்கள் வசம் இருப்பதால் எது வேண்டுமானலும் செய்யலாம் என்ற ஆணவத்தில் போது தேர்தலில் கூட பல ஊழல் அராஜங்களை புரிந்த போதிலும் மாபெரும் மக்கள் ஆதரவினால் எதிர்கட்சிகளின் கூட்டணியான 'மக்கள் கூட்டணி' 75 நாடாளுமன்ற இடங்களையும்,5 மாநில சட்டமன்றங்களையும் கைப்பற்றியுள்ளது.
தமிழர்களின் பேரெழுச்சி....
கடந்த 50 வருடங்களாக தேசிய முன்னணியின் அபார ஆதரவளர்களாக இருந்து வந்த மலேசியவாழ் இந்திய சமுதாயத்தினரின் எதிர்ப்பு பல நாடாளுமன்ற,சட்டமன்ற முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது என்றே கூற வேண்டும்.இந்தியர்கள் அதிகமாக வாழும் 3 மாநிலங்கள் எதிர்கட்சியின் வசம் வந்திருப்பதே இதற்கு நல்ல சான்று.இந்தியர்கள் அதிகமாக வாழும் பேரா,பினாங்கு,சிலாங்கூர், ஆகிய 3 மாநிலங்கள் உட்பட 5 மாநிலங்களை வென்றுள்ள மக்கள் கூட்டணி கெடா மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களையும் கைப்பற்றியுள்ளது.
இந்தியர்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி வாக்கு வேட்டையில் இறங்கிய மக்கள் முன்னணி தனது முயற்சியில் வெற்றியும் அடைந்துள்ளது.இந்தியர்களின் மனதை பெரும் வகையில் புண்படுத்திய தேசிய முன்னணியின் தலைவர்கள் பலர் இப்பொழுது அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.ஹிண்ட்ராஃப் அமைப்பின் மூலம் வெடித்த 'மக்கள் சக்தி' புரட்சி,இந்த தேர்தலில் 62 தொகுதிகளில் தனது பலத்தை நிருபித்துள்ளது.
BYE BYE மஇகா......
மலேசிய இந்தியர்களின் குரல் என்று பிதற்றிக்கொண்டிருந்த மஇகாகாரர்கள் எல்லாம் ஆளையே காணோம்.....
தானே இந்தியர்களின் தலைவன் என்று பிதற்றிய மாபெரும் அறிவாளி,தங்களை கைவிட்டால் இந்தியர்கள் மண்ணைத்தான் உண்ண வேண்டும் என்று பாடல் பாடிய மாண்புமிகு(நேற்றுவரை) ச.சாமிவேலு தனது சொந்த சுங்கை சிப்புட் தொகுதி மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
ம இகா போட்டியிட்ட 9 நாடாளுமன்ற தொகுதிகளில் 3இல்தான் வெற்றி பெற்றுள்ளது.19 சட்டமன்ற தொகுதிகளில் 4-5தான்(தற்பொழுதைய நிலவரப்படி)
வென்றுள்ளது.சாமிவேலுவுக்கும்,மஇகாவுக்கும் மக்கள் சக்தி தந்த பரிசு,மலேசிய இந்தியர்களின் வாழ்வில் பொன்னான சரித்திர நாளாகும்.
-தொடரும்-
5.3.08
வேண்டாம் பாரிசான்
டான்ஸ்ரீ கோ சூ கூன்,ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக பினாங்கின் முதல்வராக இருப்பவர்,இப்பொழுது மத்திய அரசாங்கத்திற்கு தாவ போகிறார்.மத்திய அரசாங்கத்திற்கு தாவ இவர் தேர்வு செய்திருக்கும் தொகுதி பத்து கவான் தொகுதி.பத்து கவான் தொகுதியில் வாழும் மானமுள்ள தமிழர்களே,இந்த கோ சூ கூனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சிலவற்றை உங்களுக்காக தொகுக்கிறோம்.
- இந்தியர்களுக்கு திறமையில்லையாம்.
இம்முறை தேர்தலில் கெராக்கான் கட்சியின் சார்பில் மொத்தம் 43 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.இதற்கு என்ன காரணம் என்று கேட்ட பொழுது,"இந்தியர்கள் திறமை இல்லாதவர்கள்" என்ற பதில் வந்தது கோ சூ கூனிடமிருந்து.இந்தியர்கள் பதவி வகிக்க திறமையில்லாதவர்கள்,ஆனால் இந்தியர்களின் வாக்குகள் மட்டும் திறமையானதோ?!சொந்த கட்சியில் உள்ள இந்தியர்களை புறக்கணிக்கும் இந்த கோ சூ கூனா நமது தொகுதி இந்தியர்களுக்காக நாடளுமன்றத்தில் குரல் கொடுப்பார்?!சிந்தியுங்கள்....
- சகோதரர் பரஞ்சோதியின் மீது நடவடிக்கை.
கெராக்கான் கட்சியை சேர்ந்த சகோதரர் பரஞ்சோதி அவர்கள் அம்னோ அரசாங்கம் இந்தியர்களை கருவறையிலிருந்து,கல்லறை வரை மூன்றாம் தர குடிமக்கள் போல் நடத்துகிறது என்ற உண்மையை கூறியதற்காக அவரின் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுத்தவர்தான் இந்த கோ சூ கூன்.தனது அம்னோ முதலாளிகளிடம் தன்க்குள்ள விசுவாசத்தை காட்டவே இந்நடவடிக்கை.உண்மையை கூறியதற்காக தண்டிக்கப்பட்டவர் சகோதரர் பரஞ்சோதி அவர்கள்.அந்த மறத்தமிழனை வஞ்சித்த இந்த கோ சூ கூனுக்குதான் உங்கள் வாக்கா??
- அம்னோவின் தீவிர ஆதரவாளர்கோ
சூ கூன்,இனவாத அம்னோவின் தீவிர ஆதரவாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.அம்னோ இளைஞரணி தலைவர் ஹிஷாமுடினின் மிரட்டலுக்கு பணிந்துதான் சகோதரர் பரஞ்சோதி மீது இவர் நடவடிக்கை எடுத்தார் என்பது நினைவுக்கூறத் தக்கதாகும்.அம்னோ தலைவர்களுக்கு இவர் பரம விசுவாசி;மாநில மக்களை விட,தனது கட்சிக்காரர்களை விட,தனது அம்னோ முதலாளிகள்தான் இவருக்கு முக்கியம்.இப்படிப்பட்டவர் நமது தொகுதிக்கு தேவையா??
- பினாங்கு தீவில் நிராகரிக்கப்பட்டவர்.
இவ்வளவு நாளும் பினாங்கு தீவில் உள்ள தொகுதியில் தேர்தலில் நின்ற கோ,இப்பொழுது ஏன் செபராங் பிறை பக்கம் திரும்பியுள்ளார்?!கோ சூ கூன் மீது பினாங்கு தீவில் உள்ள மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,அதனால்தான் இப்பொழுது நமது பக்கம் காற்று வீசுகிறது.அம்னோவின் மிரட்டல்,உருட்டல்களுக்கு இவர் அடிபணிவதுதான் இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம்.அப்துல்லா படாவியின் மருமகன்,கைரி ஜாமலுடினின் நேரடி மிரட்டலைக் கூட எதிர்க்காத இவரின் அம்னோ விசுவாசம்தான் நமது தொகுதிக்கு தேவையா?!கைரியின் பொம்மைதான் உங்களுக்கு வேண்டுமா?!
- இந்தியர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தராதவர்.
சில தினங்களுக்கு முன்பு,வால்டோர் தோட்ட மக்கள் தமிழ்பள்ளியில் போராட்டம் ஒன்றை நடத்தியபோது அவ்வழியே சென்ற கோ,மருந்துக்குக்கூட தனது காரை நிறுத்தவில்லை.உண்மையில் இந்தியர்களிடம் கரிசணை உள்ளது என்றால்,காரை நிறுத்தி அவர்கள் பிரச்சனையை கேட்டிருக்கலாம்தானே?!இப்பொழுது நம் மீது பொழியும் பாசம் எல்லாம் வெறும் தேர்தல் நாடகம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
- பக்கம் இருக்கும் யானை தெரியவில்லை,எங்கோ இருக்கும் ஈ தெரியுமாம்.
ஏறக்குறைய 15 ஆண்டுகளாக பினாங்கின் முதல்வராக இருக்கும் கோ சூ கூனிற்கு,இவ்வளவு நாளும் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் நம் தொகுதி மக்களின் பிரச்சனை தெரியாமல் போனது ஏனோ?!20-30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பினாங்கு தீவில் இருக்கும் போதே நமது பிரச்சனைகளை தீர்க்காத இவர்தான் 300 கிலோமிட்டர் தூரம் இருக்கும் கோலாலம்பூரில் போய் நமது பிரச்சனயை தீர்க்கப்போகிறாரா??சிந்தியுங்கள்....
- இந்தியர்கள் வாக்குகளை நம்பாதவர்.
கோ சூ கூன்,அவர்கள் இந்தியர் வாக்குகளை நம்பி தேர்தலில் தாம் நிற்கவில்லை என்று பிறையில் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.அவர் வாயாலே கூறிவிட்டார்,இன்னும் ஏன் அவருக்கு நாம் வாக்களிக்க வேண்டும்?!இவ்வளவு விளக்கிய பிறகும்,இல்லை நாங்கள் கோ சூ கூனிற்குதான் வாக்களிப்போம் என்று நீங்கள் அடம்பிடித்தால்,அது உங்கள் விருப்பம்.இதற்கு மேல் உங்களை திருத்த முடியாது.
சோற்றில் உப்பிட்டு சாப்பிடும் எந்த தமிழனும்,தமிழர்களை மதிக்காத,தமிழனுக்கு(பரஞ்சோதி) அநீதி இழைத்த இந்த கோ சூ கூனுக்கு வாக்களிக்க மாட்டான் என்பதுதான் உண்மை.தேர்தல் முடிவு வந்தால் தெரியும் நம்மில் எத்தனை பேர் சோற்றில் உப்பிட்டு உண்கிறோம் என்று!!