23.5.08

எங்கே செல்கிறது இந்த்ராஃப்.....???


இந்த்ராஃப்.......


மலேசிய இந்தியர்களின் வாழ்வில் புயலாய் புகுந்து,வசந்தத்தை தந்த இயக்கம்.


"உனதுரிமை இழக்காதே,பிறருரிமை பறிக்காதே" என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு போர்க்களத்தில் புகுந்த இவ்வியக்கத்தின் அசுர வளர்ச்சியை சற்றே மீழ்பார்வையிடுவோம்.
நவம்பர் 25ஆம் தேதி.......

எந்த மலேசிய இந்தியனும் இந்த நாளை தனது வாழ்வில் மறக்கவே மாட்டான்.

மலேசிய அரசியலில் ஏற்பட்ட ஒரு பயங்கர நடுக்கத்திற்கு மிக முக்கிய காரணம் இந்த "நவம்பர் 25" அதிர்வுதான்.இனவாத அம்னோ மலாய்க்கார சகோதரர்களை இந்தியர்களுக்கு எதிராக திருப்பிவிட முயன்ற வேளையில், அன்வார் இப்ராகிம்,ராஜா பெட்ரா போன்ற முற்போக்கு சிந்தனைக் கொண்ட மலாய்க்காரர்கள் இந்த்ராஃபின் போரட்டத்திற்கான காரணத்தை உணர்ந்து ஆதரித்ததால்தான் ஒரு இனக்கலவரம் தோன்றாமல் போனது.

இந்த்ராஃபை நசுக்கும் முதல் முயற்சியில் தோல்வியடைந்த இனவாத அம்னோ,தொடர்ந்து தனது "இந்த்ராஃப் நசுக்கும்" முயற்சியில் கையிலெடுத்தது கொடுங்கோல் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை(இசா).சமூக அநீதியை எதிர்க்கும் இந்த்ராஃபை நசுக்க அம்னோ அரசு ஒப்ராசி லாலாங்-கை போன்ற இசா கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது.இந்த்ராஃபை தேசிய அச்சுறுத்தல் என்று காரணம் ஒன்றையும் முன் வைத்தது.இந்த இசா கைதானது,நாடாளவில் உள்ள ஆலயங்களில் பிரார்த்தனை கூட்டங்களுக்கு வழிவகுத்தது.இந்த பிரார்த்தனை கூட்டங்களானது நீண்ட நாள் பாரிசான் விசுவாசிகளான இந்தியர்கள் மத்தியில் மாபெரும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.அதன் விளைவு,மார்ச் 8 அரசியல் சுனாமி.

தேர்தலுக்கு முன்பு ஜசெகாவின் ஆலோசகர்,ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு லிம் கிட் சியாங் அவர்கள் கூறினார்,இந்தியர்கள் ஆதரவு முழுமையாக கிடைத்தால் 62 தொகுதிகள் எதிர்கட்சி வசமாகும் என்று.ஆனால் தேர்தலில் இன்னும் போனஸாக 20 தொகுதிகள் சேர்த்து 82 தொகுதிகளில் மக்கள் கூட்டணி வென்றது.இந்த வெற்றிக்கு இந்த்ராஃபின் எழுச்சியும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.இந்த்ராஃபின் போராட்டம் தேர்தலோடு முடிந்த ஒன்றாக அமைந்து விடக்கூடாது என்பதே சமுதாய ஆர்வலர்களின் கருத்தாகும்.இந்த்ராஃபின் போராட்டம் பொதுத்தேர்தலோடு முடிந்து விடவில்லை.தொடர்கின்றது.......

அந்த தொடர்ச்சி எங்கே,எதை நோக்கி செல்கின்றது என்பதிப்பற்றிதான் இந்த ஆய்வுக்கட்டுரை.

மார்ச் 8 அரசியல் சுனாமிக்கு பிறகு,5 மாநிலங்களை கைப்பற்றியது மக்கள் கூட்டணி.தேசிய முன்னணியை முழுமையாக எதிர்த்த இந்த்ராஃபின் ஒரிங்கிணைப்பாளர்கள் என்று பாரைசாற்றிக்கொள்ளும் சிலர் தொடர்ந்தார் போல் மக்கள் கூட்டணி வெற்றி விழாக்களில் கலந்துக்கொண்டனர். இதெல்லாம் வெற்றி களிப்பிற்காக மட்டுமல்ல,மற்றுமொன்றையும் எண்ணத்தில் வைத்துதான்.


இந்த்ராஃபின் தேசிய ஒருங்கிணைப்பு பட்டவொர்த்தில் மையமிட்டிருந்தது போல ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.பினாங்கில் மொத்த ஆட்சி மையமும் தங்களை கேட்டே நடப்பது போலவும் காட்டிக்கொள்ளப்பட்டது.

ஒருநாள்,அனைத்து வட்டார ஒருங்கிணைபாளர்களையும் அழைத்து பேசினார் அந்த தேசிய ஒருங்கிணைப்பாளர்."தேர்தலில் வென்று விட்டோம்,இனி நமது சன்மானங்களை பெற்றுக்கொள்வோம்" என்பது போல் சென்றது அந்த கலந்துரையாடல்.பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களை,"இராமசாமி அதை சொன்னார் செய்யவில்லை.இராமசாமி இதை சொன்னார் பேச்சையே காணோம்" என்பது போல் சென்றது அந்த கலந்துரையாடல்.ஒருமையில் அவரைப்பற்றி பேசவில்லை என்றாலும்,அவருடைய கல்வி தகுதியான "பேராசிரியர் அல்லது PROFESSOR" என்ற அடைமொழியை அவர்கள் உபயோகிக்காததை கண்டு நான் சற்று ஆதங்கப்பட்டேன்.பேராசிரியர் நடவடிக்கைகளை தற்காத்தும் பேசினேன். உடனே,குறிப்பிட்ட ஒருங்கிணைப்பாளர் தாளம் மாற்றி வாசித்தார்.பேராசிரியர் இராமசாமி என்று கூற தொடங்கி விட்டார்.

அதன் பிறகு நடந்த கலந்துரையாடல்களுக்கு எனக்கு அழைப்பில்லை.இந்த கட்டத்தில்தான் தலைத்தூக்கியது போராட்டம்.என்ன போராட்டம்.....

பதவி போராட்டம்........

பினாங்கில் உள்ள 4 புகழ்பெற்ற ஆலயங்களை நிர்வகிப்பது பினாங்கு இந்து அறப்பணி வாரியமாகும்.பினாங்கு மாநில அரசின் கீழ் செயல்படும்,இந்த வாரியத்திற்கு சொந்தமாக 125 மில்லியன் சொத்துகள் உள்ளது.இந்த வாரியத்திற்கான தலைமை பொறுப்பை எதிர்பார்த்தார் குறிப்பிட்ட இந்த்ராஃப் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஒருவர்.அவரது கனவில் விழுந்தது அடி.பினாங்கு மாநில அரசு,வாரியத்தின் தலைவராக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர்,தனசேகரன் அவர்களை வாரிய தலைவராக அறிவித்தது.இந்த சட்டமன்ற உறுப்பினரும் பட்டவெர்த்தை சேர்ந்தவர் என்பதால்,பட்டவெர்த்தில் இயங்கிய மக்கள் சக்தி இரண்டானது.இந்த்ராஃப் தேசிய ஒருங்கிணைப்பாளர் பக்கம் ஒரு மக்கள் சக்தியும்,சட்டமன்ற உறுப்பினர் பக்கம் ஒரு அணியும் நின்றது.தலைவர் பதவிதான் போச்சு,வாரிய உறுப்பினர் பதவியாது மிஞ்சும் என்று நம்பியிருந்த தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு மேலும் ஓர் அடி. இந்த்ராஃபின் நிதியில் முறைக்கேடு என்ற காரணத்தை சுட்டி இவருக்கு வாரிய உறுப்பினர் பதவி மறுக்கப்பட்டது.

தொடர்ந்து இவர் கேட்டது,செனட்டர் பதவி.இவரின் விசுவாசிகள் சிலர் நாளிதழ்களின் வழி இவரின் ஆசையை வெளிபடுத்தினர்.ஒரு கலந்துரையாடலில் நான் கலந்துக்கொண்டபோது,இவரின் தீவிர விசுவாசி ஒருவர் செனட்டர் பதவியை அண்ணனுக்கே தர வேண்டும் என்று அடித்து பேசினார்.செனட்டர் பதவிகளுக்கு இந்த்ராஃபின் 5 தியாகிகளே தகுதியானவர்கள் என்று நான் அங்கே வாதிட்ட பொழுது,சிலர் அதனை ஏற்றுக்கொண்டனர்;சிலர் விடாப்பிடியாக தங்கள் அண்ணனே செண்ட்டர் பதவிக்கு தகுதியான்வர் என்று வாதிட்டனர்.இதுதான் இந்த்ராஃபா??

தொடர்ந்து இவர் அடிப்போட்டது,நகராண்மைக்கழக உறுப்பினர் பதவிக்கு!!

அதுவும் கிடைக்காத போதுதான்,இந்தியர்களுக்கு பேராசிரியர் இராமசாமி எதுவும் செய்யவில்லை என்று ஒரு முட்டாள்தனமான அறிக்கையை விடுத்தனர்.பினாங்கு இந்தியர்கள் அந்த முட்டாள்தனமான அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.மேலும்,பேராசிரியர் அவர்கள் அந்த அறிக்கையை வெளியிட்டோருக்கு சரியான பதிலடி கொடுத்ததும்.பேச்சு மூச்சே காணோம்.

ஆகக்கடைசியாக எதுவும் சரி வராததால்,தானே ஓர் இயக்கம் ஆரம்பித்து, அதற்கு தானே தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு அமைதியாகி விட்டார் இந்த ஒருங்கிணைப்பாளர்.அண்மையில்,அந்த இயக்கத்தின் சார்பாக ஒரு மாபெரும் நிகழ்ச்சி ஒன்றையும் படைத்திருந்தார்.அதற்கு பதிலடியாக மக்கள் சக்தியின் அதிருப்தி பிரிவும் அண்மையில் ஜசெக சார்பாக மற்றுமொரு நிகழ்வை படைத்திருந்தது.

மேற்குறிப்பிட்ட தேசிய ஒருங்கிணைப்பாளரின் விசுவாசிகள் அடிக்கும் கொட்டமும் தாங்க முடியவில்லை.JKKK பதவி முதற்கொண்டு நகராண்மைக்கழக உறுப்பினர் பதவி வரைக்கும் அனைத்திற்கும் போராடுகிறார்கள்.ஆனால் இந்த்ராஃபின் உண்மை போராட்டத்தை மறந்து விட்டனர்!!

இப்பொழுது உதயக்குமார் பற்றியோ,மற்ற நாலவரை பற்றியோ பேச்சையேக் காணோம்!!

இப்பொழுது இவர்களுக்கு முக்கியமெல்லாம்,பதவியும்,பட்டமும்தான்!!!

உண்மையான இந்த்ராஃப் போராட்டததை இவர்கள் மறந்து விட்டதை காட்டும் விதம் அமைந்திருப்பதுதான்,வசந்தக்குமார் அவர்களின் மனைவி விக்னேஸ்வரி அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கும் அறிக்கை!!


-தொடரும்-

No comments: